துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் 46 பழங்குடியின மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா மற்றும் கலைஞர் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஆணைகளை வழங்கினார் - Minnalkalviseithi

Latest

Wednesday, 18 June 2025

துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் 46 பழங்குடியின மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா மற்றும் கலைஞர் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஆணைகளை வழங்கினார்

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம் கீழவடகரை ஊராட்சியைச் சேர்ந்த செல்லாங்குடியிருப்பில் வசிக்கும் 46 பழங்குடியின மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா மற்றும் கலைஞர் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஆணைகளை வழங்கினார். 


தேனி மாவட்டம். மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கொட்டக்குடி, அகமலை, சிறைக்காடு. சொக்கனலை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பழங்குடியின குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பழங்குடியினரின் கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெரியகுளம் வட்டம், செல்லாங்குடியிருப்பில் வசித்து வரும் பழங்குடியினர் மக்களின் கோரிக்கையினை ஏற்று கரடி பொட்டல் பகுதியில் இடஒதுக்கீடு செய்யப்பட்டு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில் இன்றைய தினம், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் 46 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டாக்களை அவர்களின் வசிப்பிடத்திற்கே நேரில் சென்று வழங்கினார். 

மேலும் அவர்களுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தலா ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டுவதற்கான ஆணைகளையும் வழங்கினார். அதனைத் தொடர்ந்து ஆண்டிப்பட்டி, தொப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த 10 திருநங்கைகளைக் கொண்ட தாய்க்காவியா கலைக்குழுவினருக்கு 1.24 லட்சம் ரூபாய் மதிப்பிலான சலங்கை, மயில், கரகம், டிரம்ஸ், பறை ஆகிய கலைநிகழ்ச்சிகளுக்கான பொருட்கள் மற்றும் இசைக் கருவிகளை மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் 3 நபர்களுக்கு தையல் இயந்திரங்களையும். ஒரு மகளிர் சுய உதவிக்குழுவிற்கு சமுதாய முதலீட்டு நிதியாக 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையையும், 23 நபர்களுக்கு முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட அட்டைகளையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தங்க தமிழ்ச் செல்வன், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.என்.இராமகிருஷ்ணன், திரு.ஆ.மகாராஜன், திரு.கே.எஸ்.சரவணக்குமார். சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. பிரதீப் யாதவ்,இ.ஆ.ப., கூடுதல் செயலாளர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா. இ.ஆ.ப.. மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத்சிங்,இ.ஆ.ப., உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment