துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நந்தனம் அரசு கலைக்கல்லூரியில் 4.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கலையரங்கம்

0 MINNALKALVISEITHI

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நந்தனம் அரசு கலைக்கல்லூரியில் 4.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1.000 இருக்கைகள் வசதியுடன் கட்டப்பட்டுள்ள "கலைஞர் கலையரங்கத்தை" திறந்து வைத்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (20.4.2025) நந்தனம் அரசு கலைக்கல்லூரியில் 4.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1.000 இருக்கைகள் வசதியுடன் கட்டப்பட்டுள்ள"கலைஞர் கலையரங்கத்தை" திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் நந்தனம் அரசு கலைக்கல்லூரியின் முன்னாள் மாணவரும், இந்நாள் வணிகவியல் துறை பேராசிரியருமான திரு.ஆர்.ராஜ்குமார் அவர்கள் கல்லூரியின் மேம்பாட்டிற்காக 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையை மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களிடம் வழங்கினார். மேலும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாநில அளவில் நடத்தப்பட்ட விரைவு வினாடி வினா (ஹேக்கத்தான்) போட்டியில், நந்தனம் அரசு கலைக்கல்லூரியின் நிதி மற்றும் கணக்கியல் துறை மாணவர்கள் தாங்கள் பெற்ற வெற்றிக் கோப்பையை மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றனர்.

இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை,

மாண்புமிகு அமைச்சர் அண்ணன் மா.சுப்பிரமணியன் அவர்களுடைய, சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 4 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், இன்றைக்கு நந்தனம் அரசு கலைக்கல்லூரியில் கட்டப்பட்டுள்ள இந்த கலைஞர் கலையரங்கத்தை உங்கள் முன்னிலையில் நான் திறந்து வைப்பதில் நான் மிகுந்த பெருமையடைகின்றேன். மகிழ்ச்சி அடைகின்றேன். இந்த வாய்ப்பை அளித்த அண்ணன் மா.சுப்பிரமணியன் அவர்களுக்கு என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நான் படித்தது பி.காம். லையோலா காலேஜில். நான் படிக்கும்பொழுது என்னுடைய காலேஜ்க்கு அதிகமாக சென்றதைவிட அதிகமாக வந்தது இந்த நந்தனம் கலைக்கல்லூரிக்குதான், படிப்பதற்காக அல்ல விளையாடு வதற்காக வருவேன். இங்கே இருக்கக்கூடிய விளையாட்டு அரங்கத்தில் தான் நானும் என்னுடைய நண்பர்களும் ஏன் நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கூட அடிக்கடி இங்கு வந்து உடற்பயிற்சியில் ஈடுபடுவார். சேர்ந்து கிரிக்கெட் விளையாட்டு எல்லாம் விளையாடுவோம்.

அப்படிப்பட்ட அதே கல்லூரிக்கு இன்றைக்கு என்னை வரவழைத்து இப்படி ஒரு சிறப்பான வாய்ப்பை அளித்த அண்ணன் மா.சுப்பிரமணியன் அவர்களுக்கு மீண்டும் என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

1969-ஆம் ஆண்டில் முதலமைச்சராக இருந்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் நந்தனம் ஆடவர் அரசுக் கலைக்கல்லூரியை திறந்து வைத்தார்கள். இன்றைக்கு அதே கலைஞர் பெயரிலான இந்த கலையரங்கத்தை திறந்து வைக்கும் வாய்ப்பை நான் பெற்றிருக்கிறேன்.

சென்னை எப்படி தமிழ்நாட்டினுடைய அடையாளமோ, அதுபோல. சென்னையினுடைய ஒரு மிக மிக முக்கியமான அடையாளமாக இந்த நந்தனம் அரசுக் கலைக்கல்லூரி புகழ் பெற்று இருக்கின்றது. அப்படிப்பட்ட நந்தனம் அரசு கலைக்கல்லூரியினுடைய மாணவர்களுக்கு அடையாளம் என்றால் அவர்களுடைய தமிழ்ப்பற்றும், இனப்பற்றும் அதிகம் என்று கலைஞர் அவர்களே பலமுறை பாராட்டி இருக்கின்றார்.

இந்தக் கல்லூரியில் படித்த பலர் அரசு அதிகாரிகளாக, காவல்துறை அதிகாரிகளாக. சட்டமன்ற உறுப்பினர்களாக, மக்கள் பிரதிநிதிகளாக சிறப்பாக திகழ்ந்து வருகிறார்கள்.

இந்தக் கல்லூரியில் படித்த அண்ணன் தாயகம் கவி அவர்கள் இங்கு மேடையில் உட்காந்திருக்கிறார். அவர் சட்டமன்ற உறுப்பினர், அண்ணன் மா.சுப்பிரமணியன் அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்பொழுது இது பெரிய ரெக்கார்ட் பிரேக் என்று சொன்னார். மிகப்பெரிய வரலாற்றுச் சாதனை என்று கூறினார். நான் கூட இந்த அரங்கத்தை தான் பெருமையாக சொல்கிறார் என்று நினைத்தேன். மாணவர்கள் ஒரு ஞாயிற்றுக்கிழமையில இந்த அரங்கம் முழுக்க நிரம்பியிருக்கிறார்கள். இது மிகப்பெரிய வரலாற்றுச் சாதனை என்று கூறினார்.

கல்லூரிகளுக்கு எப்படி வகுப்பறைகள், ஆய்வுக்கூடங்கள் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு. அதைவிட முக்கியம் இந்த மாதிரி ஆடிட்டோரியமும் மிக மிக முக்கியம். நாம் எல்லாம் கல்லூரியில் படிப்பை நினைவுகள் இருக்கும். Unforgettable Memories என்பார்கள். அது போன்ற பல நினைவுகளை நீங்காத நினைவுகளை இந்த ஆடிட்டோரியம் நிச்சயம் உங்களுக்குத் தரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது.

படித்து முடித்துவிட்ட பிறகு முன்னாள் மாணவர்களாக 160 ஆண்டுகள் கழித்து நீங்கள் மீண்டும் இந்த கல்லூரிக்கு வரும் பொழுது, நீங்கள் உங்கள் வகுப்பறையில் அமர உங்களுக்கு உரிமை கிடையாது அனுமதிக்கமாட்டார்கள். ஆனால், இந்த மாதிரி நிகழ்ச்சிகள் கலைநிகழ்ச்சிகள், Alumni Meet வரும் பொழுது இந்த ஆடிட்டோரியத்துக்குள் வந்து நீங்கள் உட்காரலாம்.

அண்ணன் மா.சு அவர்கள். உங்களுக்கு வகுப்பறை கட்டிக் கொடுத்து இருந்தால் கூட சீக்கிரம் மறந்து இருப்பீர்கள். ஆனால், இந்த கலையரங்கத்தை, கட்டிக் கொடுத்த காரணத்தால். எந்த காலத்திலும் அண்ணன் மா.சுப்பிரமணியன் அவர்களை நீங்கள் மறக்க முடியாது. வகுப்பறைகள் எப்பவுமோ படிக்கக்கூடிய மாணவர்களுக்கு மட்டுமே சொந்தம். ஆனால், இந்த கலையரங்கம் தான் முன்னாள் மாணவர்கள், இன்றைய மாணவர்கள், நாளைய மாணவர்கள் என அத்தனைப் பேருக்கும் சொந்தம்.

1986-ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது, இதே நந்தனம் ஆர்ட்ஸ் மாணவர்கள் தான் முதலாவதாக வீதிக்கு வந்து போராடின மாணவர்கள் என்ற பெருமை இந்த கல்லூரிக்கு உண்டு.

அந்த சமயம், கல்லூரியினுடைய Student Union Election-னுடைய தலைவராக அண்ணன் தாயகம் அவர்கள் தான் போட்டியிடுகிறார்கள். அப்போது மாணவர்கள் எல்லோரும் அவர்களுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறார்கள். நாங்கள் உங்களுக்கு வாக்களிக்கின்றோம். உங்களை Student Union Election-ல வெற்றி பெற வைக்கின்றோம். வெற்றி பெற்ற பிறகு. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களை இந்த கல்லூரிக்கு அழைத்து வந்து பேச வைக்க வேண்டும்" என்று அவரிடம் கேட்கிறார்கள். அவரை வெற்றியும் பெற வைத்தார்கள்.

ஆனால், அன்றைக்கு கழகம் ஆட்சிப் பொறுப்பில் இல்லை. எதிர்க்கட்சியில் இருந்தது. எதிர்க்கட்சி என்பதாலும், அப்போது இந்தித்திணிப்புக்கு எதிராக சட்ட நகல் எரிப்புப் போராட்டத்தை அறிவித்ததாலும், கலைஞர் அவர்களை கல்லூரிக்குள் அனுமதிக்க கல்லூரி நிர்வாகம் அனுமதிக்கவில்லை. கல்லூரி முதல்வர் அப்போது தயங்கினார். கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள். முத்தமிழ் கலைஞர் அவர்களை அழைத்து வர அனுமதி தர வேண்டும் என்று மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினார்கள். போராட்டம் செய்வதற்க்கு நந்தனம் அரசு கலைக்கல்லூரி மாணவர்களுக்கு நாம் சொல்லித் தர தேவையில்லை. இன்னும் சொல்லப்போனால். கல்லூரி முதல்வருடைய அறையையே அன்றைக்கு பூட்டினார்கள்.

இதெல்லாம் நான் பெருமையாக சொல்லவில்லை. எந்த அளவுக்கு கல்லூரி மாணவர்கள் கலைஞரை எப்படியாவது இந்த கல்லூரிக்குள் கூட்டி வா வேண்டும் போராட்டம் செய்தார்கள் என்று எடுத்துக்காட்டுவதற்காக சொன்னேன்.

மாணவர்களின் அந்தப் போராட்டத்தைப் பார்த்து, அன்றைய அரசு இறங்கி வந்தது. கலைஞர் அவர்களை கல்லூரிக்குள் பேச அனுமதித்தது. அன்றைக்கு இந்த அரங்கம் கிடையாது. இந்த ஆடிட்டோரியம் கிடையாது. இங்கு இருக்கக்கூடிய மைதானத்தில் தான் மேடை அமைத்து பேசினார்கள்.

கலைஞர் பேச ஆரம்பிக்கும்போது மழை வந்துவிட, இங்கு இருக்கக்கூடிய சின்ன அரங்கத்தில் ஒரு தற்காலிக மேடை அமைத்து கலைஞர் அவர்களுக்கு மைக் வசதி செய்து கொடுக்கப்பட்டு பேச கலைஞர் அவர்கள் வந்தார்கள்.

அந்த மேடையில் நின்று. நந்தனம் கலைக்கல்லூரி மாணவர் பேரவையை தொடங்கி வைத்து, கலைஞர் அவர்கள் இந்தித்திணிப்புக்கு எதிராக உணர்ச்சி பொங்க பேசினார்கள்.

கலைஞர் அவர்கள் பேச அன்றைக்கு இங்கே ஆடிட்டோரியம் இல்லை. இன்றைக்கு கலைஞர் பெயரிலேயே, நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மா.சு அண்ணன் அவர்கள் ஒரு அரங்கத்தை ஆடிட்டோரியத்தை கட்டி கொடுத்திருக்கிறார்கள் உருவாக்கி கொடுத்திருக்கிறார்கள்.

இந்தித்திணிப்புக்கு எதிராக கலைஞர் அவர்கள் இந்தக்கல்லூரியில் அன்றைக்கு பேசிய கருத்துக்கள். இன்றைக்கும் பொருத்தமாக இருக்கின்றது.

1986-இல், கலைஞர் அவர்கள் இந்தக்கல்லூரியில் பேசும் பொழுது "இந்த சிறிய அறையில் நிறைய மாணவர்கள் இருக்கிறீர்கள். உங்களை இந்த அறைக்குள் திணித்துக்கொண்டு நிற்கிறீர்கள். அதனால், காற்று உள்ளே வரமுடியவில்லை. நான் பேசிமுடித்தவுடன் நீங்கள் கலைந்து சென்றுவிடுவீர்கள் என்பதால், இந்த திணிப்பு அரை மணி நேரத்தில் விலகிவிடும். ஆனால், இந்தித்திணிப்பு எப்போது விலகும்" என்று கலைஞர் கேட்டார்கள்.

கலைஞர் அன்றைக்கு கேட்ட அந்தக்கேள்வி இன்றைக்கும் நமக்கு பொருத்தமாக இருக்கின்றது. அதற்கான விடையை, நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் காலத்தில், நிச்சயம் தமிழ்நாட்டு மாணவர்கள் நீங்கள் வென்று எடுப்பீர்கள் அதற்கான விடையை நாம் நிச்சயம் பெறுவோம் என்று கூறிக்கொள்கின்றேன்.

தமிழ்நாடு என்பதற்கு அடிப்படையே தமிழ் தான். அந்தத் தமிழுக்கு இப்போது மிகப்பெரிய ஆபத்தை பல்வேறு வழிகளில் ஏற்படுத்த முயன்றிருக்கிறார்கள். மும்மொழிக் கொள்கை கொண்டு வருகின்றார்கள். நீட் தேர்வு கொண்டு வந்தார்கள், இந்தித் திணிப்பு கொண்டு வருகின்றார்கள். புதிய கல்விக் கொள்கை என்று வெவ்வேறு பெயர்களில் இதெல்லாம் வந்தாலும், ஒட்டுமொத்தமாக இதன் நோக்கம் தமிழ்நாட்டில் இந்தியை எப்படியாவது நுழைத்துவிட வேண்டும் என்பது தான்.

இதற்கான வாதங்களை நிறைய பேர் சொல்வார்கள். உண்மையைப் போலவே சிலர் பேசுவார்கள். மாணவச் செல்வங்களாகிய நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உண்மைய புரிந்துகொள்ள வேண்டும். இன்றைக்கு தமிழ்நாட்டில் தமிழ் உணர்வு உயிர்ப்போடு இருப்பதற்கு காரணம், 1965-இல் ஏற்பட்ட மாணவர்களுடைய எழுச்சி தான் முக்கிய காரணம். அந்த மாணவர்கள் போராட்டம் தான் இந்தி திணிப்பை தமிழ்நாட்டிற்குள் வரவிடாமல் தடுத்து நிறுத்தியது. உங்களுடைய சீனியர்கள் நடத்திய போராட்டம் தான் தமிழ்மொழியை, தமிழ்ப் பண்பாட்டை காத்து நாம் எல்லோரையும் பாதுகாத்தது.

இன்றைக்கு உங்களுக்கு முன் போராடிய அந்த சீனியர்களுக்கு எல்லாம் இப்போது, 70, 80 வயது ஆகியிருக்கும். அவர்கள் எல்லாம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் போராடினார்கள். இன்றைக்கு அவர்களிடம் போய் கேட்டீர்கள் என்றால், உங்களுடைய சீனியர்களுக்கு நீங்கள் கொடுக்கக் கூடிய ஒரே பரிசு என்ன தெரியுமா?

"எங்களுடைய காலத்திலும் நாங்களும் இந்தி திணிப்பை ஏற்றுக் கொள்ள மாட்டோம். அதில் என்றென்றும் உறுதியாக இருப்போம்" நீங்கள் உங்களுடைய சீனியர்களுக்கு கொடுக்கின்ற வாக்குறுதியைத்தான்பொதுவாக, தந்தை பெரியாராக இருந்தாலும், பேரறிஞர் அண்ணா. முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களாக இருந்தாலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதை விரும்ப மாட்டார்கள். காரணம். மாணவர்கள் படிப்பில் தான் கவனம் செலுத்த வேண்டும். போராட்டம் நடத்திக் கொண்டிருந்தால் அவர்களுடைய படிப்பு பாதித்துவிடும் என்ற எண்ணம்தான்.

ஆனால் இன்றைக்கு, கல்விக்கே ஆபத்து ஏற்படுத்தக் கூடிய வகையில் நீட் தேர்வு, முமமொழிக் கொள்கை, புதிய கல்விக் கொள்கை என்று பல தொந்தரவுகளை ஒன்றிய அரசு நம்முடைய மாணவர்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறது.

இந்த சூழ்ச்சிகளை, ஆபத்துகளை மாணவர்கள் நீங்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் இதனை சரியாக புரிந்து கொண்டால், என்றென்றைக்கும் நம்முடைய இன எதிரிகளால் நம்மை வெற்றி கொள்ளவே முடியாது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.

100 வருடங்களுக்கு முன்பு ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் தங்கி படிப்பதற்கு விடுதி வசதி கூட கிடையாது. அப்போது, டாக்டர் நடேசனார் அவர்கள் நீதிக் கட்சித் தலைவராக இருந்தார். அவர்தான், 'திராவிடன்' இல்லம் எனும் மாணவர் விடுதியை திருவல்லிக்கேணியில் 1916-ஆம் ஆண்டு தொடங்கினார்.

இன்றைக்கு, நீதிக் கட்சியின் மறுவடிவமாக இருக்கக் கூடிய தி.மு.கழகத்தின் திராவிட மாடல் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அன்றைக்கு நம்முடைய மாணவர்களுக்கு ஹாஸ்டல் வசதி கிடையாது. ஆனால், இன்றைக்கு இந்தக் கல்லூரிக்கு பக்கத்திலேயே எம்.சி.ராஜா நவீன கல்லூரி மாணவர் விடுதிக் கட்டடத்தை. சென்ற வாரம் நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மாணவர்களுக்காக திறந்து வைத்தார்கள்.

இது தான் திராவிட இயக்கத்துடைய வெற்றி. இதுதான் திராவிட மாடல் அரசினுடைய வெற்றி. திராவிட இயக்கம் எதையெல்லாம் தொட்டதோ அதில் எல்லாம் வெற்றிபெற்று வருகிறது. நிச்சயம் மாணவர்கள் உங்களுடைய துணையோடு நம்முடைய அனைத்து போராட்டத்திலும் மாணவர்கள் வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை நம்முடைய அரசிற்கு இருக்கின்றது. இதற்கு எல்லாம் என்ன காரணம், திராவிட இயக்கத்தின் கொள்கைகள் என்பது மனித உரிமை. சமூக நீதி, பகுத்தறிவு, பெண்ணுரிமைக் கொள்கைகளை அடிப்படையாக கொண்டவை. அதனால், இந்த கொள்கைகள் அனைத்தும் நிச்சயம் வெற்றி என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது.

இன்றைக்கு நம்முடைய மாணவர்களுடைய கல்விக்கான நிறைய திட்டங்களை திராவிட மாடல் அரசு நிறைவேற்றி வருகிறது. நம்முடைய உயர் கல்வித்துறை அமைச்சர் பேசுகின்றபோது கூறினார்.

தமிழ்ப்புதல்வன். புதுமைப்பெண், நான் முதல்வன் போன்ற திட்டங்கள் எல்லாம் மாணவர்கள் உயர்கல்விப் படிப்பதற்கு பேருதவியாக இருக்கின்றன. வெளிநாடுகளில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில், மேற்படிப்பு, ஆராய்ச்சிக்கல்வி பயில நம்முடைய அரசு உதவித்தொகை தொடர்ந்து வழங்கி வருகின்றது. தமிழ்நாட்டு மாணவர்கள் கல்வியில் என்றென்றும் சிறந்து விளங்கக்கூடியவர்கள் நிச்சயம் அது தொடரும் என்ற நம்பிக்கை உள்ளது.

பெரிய அறிவாளிகளாக, தொழிலதிபர்களாக, சமூகத்தில் நீங்கள் அத்துணை பேரும் வெற்றிபெற இருக்கக்கூடிய அனைத்து மனிதர்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக நீங்கள் உங்களுடைய வாழ்கையை உருவாக்கிக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டுக்கு. தமிழுக்கு எதிரான சூழ்ச்சிகளை மாணவச்செல்வங்கள் நீங்கள் வீழ்த்த வேண்டும் என்று கூறிக்கொண்டு. இதற்கு எல்லா வகையிலும் நம்முடைய அரசும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும் என்றென்றும் மாணவர்களோடு துணை நிற்பார்கள் என்று கூறிக்கொண்டு. இந்த சிறப்பான வாய்ப்பை அளித்த அண்ணன் மா.சுப்பிரமணியன் அவர்களுக்கு மீண்டும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொண்டு விடைபெறுகின்றேன்.

நன்றி வணக்கம் என்று மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு. மா.சுப்பிரமணியன். மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.தாயகம் கவி. திரு.எஸ்.அரவிந்த் ரமேஷ் திரு.ஏ.எம்.வி.பிரபாகர ராஜா, திரு.க.கணபதி. பெருநகர சென்னை மாநகராட்சி துணை மேயர் திரு.மு.மகேஷ்குமார், மண்டல குழுத்தலைவர்கள் திரு. கிருஷ்ணமூர்த்தி, திரு. இரா.துரைராஜ், உயர்கல்வித் துறை செயலாளர் திரு. சி.சமயமூர்த்தி.இ.ஆ.ப., கல்லூரிக் கல்வி ஆணையர் திருமதி எ.சுந்தரவல்லி, இ.ஆ.ப. நந்தனம் அரசு கலைக் கல்லூரி முதல்வர் முனைவர் சி.ஜோதி வெங்கடேசுவரன், மாமன்ற உறுப்பினர்கள், கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் உடனிருந்தனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.