கல்வியில் சிறந்த தமிழ்நாடு- 2025-26 கல்வியாண்டிற்கான 'புதுமைப்பெண்' மற்றும் 'தமிழ்ப் புதல்வன்' திட்டங்கள்

0 MINNALKALVISEITHI

"கல்வியில் சிறந்த தமிழ்நாடு" தமிழ்நாட்டின் மாபெரும் கல்வி எழுச்சியின் கொண்டாட்டம் 2025-26 கல்வியாண்டிற்கான 'புதுமைப்பெண்' மற்றும் 'தமிழ்ப் புதல்வன்' திட்டங்கள்

சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நாளை (25.9.2025) மாலை 4.00 மணியளவில்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களும் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் மாண்புமிகு தெலங்கானா முதலமைச்சர் திரு. அ.ரேவந்த் ரெட்டி அவர்களும் தொடங்கி வைக்க உள்ளார்கள்.

சமூகநீதியை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் தமிழ்நாடு அரசு, கல்வி அனைத்துத் தரப்பினருக்கும் சென்று சேரவேண்டும் என்கிற நோக்கத்தோடு அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரிக்குச் செல்லும் மாணவிகளுக்கு 'புதுமைப் பெண்' என்கிற திட்டத்தின்கீழும், மாணவர்களுக்கு 'தமிழ்ப் புதல்வன்' என்கிற திட்டத்தின்கீழும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறது.

"புதுமைப்பெண் 2025-26 கல்வி ஆண்டிற்கான தமிழ்ப் புதல்வன் திட்டங்களின் தொடக்கவிழா நாளை (25.9.2025) மாலை 4.00 மணியளவில் சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.

தமிழ்நாட்டின் மாபெரும் கல்வி எழுச்சியை 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' என்னும் கருப்பொருளில் கொண்டாடும் இவ்விழாவில் தலைமையேற்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களும், சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் மாண்புமிகு தெலங்கானா முதலமைச்சர் திரு. அ.ரேவந்த் ரெட்டி அவர்களும் திட்டங்களை தொடங்கி வைக்கின்றனர். இவ்விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முன்னிலை வகிக்கின்றார்.

தமிழ்நாட்டின் மாபெரும் கல்வி எழுச்சியின் கொண்டாட்டமாக இவ்விழா மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறவுள்ளது.கல்வி சார்ந்த 5 முக்கிய திட்டங்களையும் சாதனைகளையும் முன்னிலையாக வைத்து இவ்விழா 7 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

முதல் பகுதியாக தமிழ்நாட்டு மக்களின் மனதுக்கு நெருக்கமானத் திட்டமான "முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்" இடம் பெறும். அதனைத் தொடர்ந்து "நான் முதல்வன்", "விளையாட்டுச் சாதனையாளர்கள்", "புதுமைப் பெண்-தமிழ்ப் புதல்வன்" மற்றும் "அரசுப் பள்ளிகளிலிருந்து முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்குச் சென்ற சாதனையாளர்கள்" ஆகிய அரங்கங்கள் நடைபெறும்.

இவ்வரங்கங்களில் இத்திட்டங்களால் பயன்பெற்றவர்கள், இத்திட்டத்தின் மூலம் சாதித்தவர்கள், அவர்களுக்குத் துணை நின்றவர்கள். ஆசிரியர்கள், நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களையும் தங்கள் வாழ்வில் இத்திட்டங்களின் தாக்கத்தையும் பகிர்ந்து கொள்ள இருக்கின்றனர்.

இதன் பிறகு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும் மாண்புமிகு தெலங்கானா முதலமைச்சர் அவர்களும் இணைந்து 2025-26-ஆம் ஆண்டிற்கான "புதுமைப்பெண்-தமிழ்ப் புதல்வன்" திட்டங்களைத் தொடங்கி வைப்பார்கள். இந்த ஆண்டு இத்திட்டத்தின் மூலம் 2.57 இலட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சிக்குத் தொடர்ந்து பங்காற்றி வரும் சமூக சிந்தனையாளர்கள், சிறப்பாகப் பணியாற்றிய ஆசிரியர்கள், பயிற்றுனர்கள், கல்வி அமைப்புகளின் நிர்வாகிகள் ஆகியோர் பாராட்டிச் சிறப்பிக்கப்பட உள்ளனர்.

இவ்விழாவில் மாண்புமிகு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கீதா ஜீவன் அவர்கள், மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் அவர்கள், மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள். மாண்புமிகு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன் அவர்கள் ஆகியோர் மற்றும் மாண்புமிகு மேயர். நாடாளுமன்ற-சட்டமன்ற உறுப்பினர்கள். துணை மேயர். உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள். சீர்மிகு பெருமக்கள் பலர் பங்கேற்றுச் சிறப்பிக்க உள்ளார்கள்.

إرسال تعليق

0 تعليقات
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.