சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாடு 3.0

0 MINNALKALVISEITHI
சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாடு 3.0 
தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையின் கீழ் செயல்பட்டுவரும் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தின் சார்பில் தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாடு 3.0 சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நடந்து வருகிறது. 

இரண்டு நாட்கள் (04.02.2025 மற்றும் 05.02.2025) நடைபெறும் இம்மாநாட்டினை இன்று, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். இம்மாநாட்டிற்கு மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு. க. பொன்முடி அவர்கள் மற்றும் மாண்புமிகு நிதி (ம) சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள் தலைமை தாங்கினர்.

 சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை. அரசு முதன்மைச் செயலாளர் முனைவர் திரு. ப. செந்தில்குமார், இ.ஆ.ப., அவர்கள், மற்றும் தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழு உறுப்பினர்களான திரு. எரிக் சோல்ஹைம், உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை அறிவியலாளர் மருத்துவர் திருமதி. சௌம்யா சுவாமிநாதன், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு. சுந்தர்ராஜன், அண்ணா பல்கலைக்கழகத்தின் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மைய முன்னாள் இயக்குநர், 

முனைவர் திரு. ஆ. ராமச்சந்திரன், நீடித்த கடலோர மேலாண்மைக்கான தேசிய மையத்தின் நிறுவனர் இயக்குநர் பேராசிரியர் ரமேஷ் ராமச்சந்திரன், ராம்கோ சமூக சேவைகள் அமைப்பின் தலைவர் திருமிகு நிர்மலா ராஜா, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை இயக்குநர் திரு. ஆ. ர. ராகுல் நாத் இ.ஆ.ப., மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 இந்நிகழ்வில் மாண்புமிகு நிதி (ம) சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள் வரவேற்புரையாற்றுகையில் காலநிலை மாற்றம், அனைத்து மக்களையும் அனைத்து விதமான தொழில்துறைகளிலும் பாரபட்சமின்றி பாதிப்பை உண்டாக்கக்கூடிய பேரிடர் எனவும் அதனை எதிர்கொள்வதற்குத் தேவையான அனைத்து விதமான கட்டமைப்புகளையும் தமிழ்நாடு அரசு உருவாக்கி வருவதாகவும், இதன்மூலம் நமது தேசிய இலக்கான 2070-ல் நிகர பூஜ்ய கரிம உமிழ்வு இலக்கினை நம் தமிழ்நாடு அரசு 2070 -க்கு முன்னரே உறுதியாக எட்டிவிடும் எனவும் தெரிவித்தார். 

அதனைத் தொடர்ந்து, இணையவழியிலான கழிவுப் பரிமாற்ற பணியகம் (TNPCB Online Waste Exchange Bureau) தொழிற்சாலைகளுக்கான பசுமைத் தரவரிசை (TNPCB - Voluntary Green Rating of Industries), காலநிலை மாற்றத்திற்கான வாழ்வியல்முறை பசுமைச் சான்றிதழ் வழங்கும் திட்டம் ( Lifestyle for Climate Voluntary Green Rating of Mass Congregation centres such as Marriage Halls, Hotels etc..).

 இராஜபாளையம் நகரின் கரிம நீக்க வழித்தடத்திற்கான செயல் திட்டம் (Action plan for Decarbonisation pathways in Rajapalayam) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்டது. மேலும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கப் பாடுபட்ட 10 சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் சுற்றுச்சூழல் விருதுகள் வழங்கப்பட்டது. இவ்விழாவினைத் தொடங்கிவைத்து சிறப்புரையாற்றிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், காலநிலை மாற்றம் யாராலும் மறுக்க முடியாத நிதர்சனமான உண்மை எனவும் அதை எதிர்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட நான்கு இயக்கங்களான சிறப்புமிக்க

 • தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம், (Tamil Nadu Climate Change Mission) , (Green Tamil Nadu Mission) , (Tamil Nadu Wetland Mission) தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம் (Tamil Nadu Coastal Restoration Mission) ஆகியவை மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார். 

அதன் ஒரு பகுதியாக இதுவரை தமிழ்நாட்டில் இரண்டு காலநிலை உச்சி மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன. மூன்றாவது தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாடானது காலநிலை மாற்றத்திற்கெதிரான தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளை உலகிற்கு எடுத்துரைப்பதோடு அல்லாமல், உலகின் பல்வேறு சிறந்த நடைமுறைகளையும் புரிந்து, தெரிந்து, நமது மாநிலத்திற்கு ஏற்ற வகையிலான திட்டங்களை உருவாக்குவதற்கு ஒரு கருவியாகவும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில், நம்மை தகவமைத்துக் கொள்வதற்கான விவாதங்களை முன்னெடுப்பதற்கான தளமாகவும் இருக்கும் என்றும் தெரிவித்தார். 

மேலும் தமிழ்நாட்டின் எதிர்காலக் கனவுகள் அனைத்தும்கல்வியை அடித்தளமாகக் கொண்டே உள்ளது எனவும், எனவே. காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்கள் அனைவரும் காலநிலைக் கல்வியறிவு பெற்ற சமூகமாகத் திகழ காலநிலைக் கல்வியறிவினை ஒரு இயக்கமாக முன்னெடுத்து, தமிழ்நாட்டின் அனைத்து பள்ளிகளிலும் 'சூழல் மன்றங்கள் (Eco Clubs)' ஏற்படுத்தப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டார்.. காலநிலைக் கல்வியறிவிற்கென கொள்கைகளை வகுத்தும் இன்றைய சூழலில் மிகவும் அத்தியாவசியமாக உள்ள காலநிலை விழிப்புணர்வினை மாணவர்கள் மூலம் அனைத்துத் தரப்பு மக்களிடமும் கொண்டு செல்வதற்கான திட்டங்களை அரசு மேற்கொள்ளும் எனவும் தெரிவித்தார்.

 அதனைத் தொடர்ந்து, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாட்டிற்கான மாற்று வழித்தடங்கள் (Exploring Energy Transition Pathways), நகர்ப்புற போக்குவரத்திற்கான குறைந்த கரிம வழித்தடங்கள் (Low Carbon Pathways for Urban Transport & Supply Chain), (Circular Economy & Sustainable Development), தொழில்துறைகளில் குறைந்த கரிம வழித்தடங்கள் (Low Carbon Pathways for Industrial Sector) ஆகிய தலைப்புகளில் துறை வல்லுனர்கள், அரசு உயர் அலுவலர்கள், பொருளியலாளர்கள் பங்கேற்ற விவாதங்கள் மற்றும் கருத்துப் பரிமாற்றங்கள் இன்று (04.02.2025) நடைபெற்றன. 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.