பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் நடவடிக்கைகள் அரசால் கைவிடப்படும் - முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் - Minnalkalviseithi

Latest

Monday, 24 August 2026

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் நடவடிக்கைகள் அரசால் கைவிடப்படும் - முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய்

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் நடவடிக்கைகள் அரசால் கைவிடப்படும் என்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110-இன் கீழ், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்ட அறிவிப்பு 

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, சென்னையிலுள்ள மீனம்பாக்கம் விமான நிலையம் இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தால் (AAI) இயக்கப்படுகிறது. தற்போது, இந்த விமான நிலையம், ஆண்டுக்கு 30 மில்லியன் பயணிகளைக் கையாளும் திறன் கொண்டதாக உள்ளது. வளர்ந்துவரும் சென்னை மாநகரத்தின் தேவைகளைக் கருத்தில் கொண்டும், பயணிகளின் வசதிகளைக் கருத்திற் கொண்டும், தொழில் வளர்ச்சியினைக் கருத்திற் கொண்டும், சரக்குப் போக்குவரத்தை அதிகரிக்கும் வகையிலும், புதிய விமான நிலையம் அமைப்பதற்கான தேவை ஏற்பட்டுள்ளது. புதிய விமான நிலையம் அமைப்பதற்குத் தேர்வு செய்யப்படும் இடம் பெரிய அளவில் விவசாயிகளைப் பாதிக்காத வகையிலும், அதிக அளவில் குடியிருப்புகளை அகற்றாத வகையிலும் அமைய வேண்டும். ஆனால், முந்தைய அரசு விவசாயிகளைப் பெரிய அளவில் பாதிக்கும் வகையிலும், குடியிருப்புகளை அதிக அளவில் அகற்றும் வகையிலும் விமான நிலையத்தை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. ஏகனாபுரம் மற்றும் இதர கிராம மக்கள் இந்த விமான நிலையம் அமைப்பதை எதிர்த்து நடத்திய போராட்டங்களை அறிந்து, நான் 20.01.2025 அன்று அப்பகுதிக்குச் சென்று, அங்குள்ள மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, பின்வரும் அறிவிப்புகளை வெளியிட்டேன். 2 "சென்னை பரந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 12 கிராமங்களில் அமைய இருக்கும் விமான நிலையத்தை எதிர்த்துப் போராடும் மக்களுடன் நான் உறுதியாக நிற்கிறேன். 

நீண்ட நாட்களுக்கும் மேலாக இந்தத் திட்டத்திற்கு எதிராகப் போராடிவரும் விவசாயிகளுக்கு எனது ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறேன். விவசாயிகளே நாட்டின் முதுகெலும்பு, இந்த விவசாய நிலங்களைப் பாதுகாக்க இந்த மக்கள் போராடி வருகிறார்கள். விக்கிரவாண்டியில் அக்டோபர், 2024-ல் நடந்த பொதுக்கூட்டத்திலேயே பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறேன். தொழில் வளர்ச்சி மற்றும் அதற்கான விமான நிலையங்களின் பங்கு பற்றி நான் நன்கு அறிவேன். அதற்கான என்னுடைய முழு ஆதரவும் உண்டு. ஆனால் பரந்தூரில் இந்தத் திட்டம் அமையக்கூடாது, 

இந்தத் திட்டம் குறித்து அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும், குறைவான விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் வகையிலும், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையிலும் மாற்று இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும்" எனத் தெரிவித்திருந்தேன். மக்கள் மத்தியிலே, நான் அன்றே அறிவித்ததை நிறைவேற்றும் பொருட்டு, புதிய விமான நிலையம் அமைப்பது குறித்து உயர் அதிகாரிகளிடமும், துறை வல்லுநர்களிடமும் விரிவாக ஆலோசனை நடத்தினேன். ஏற்கனவே, நான் உறுதி அளித்தவாறு, பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க மேற்கொண்ட நடவடிக்கைகள், இந்த அரசால் கைவிடப்படும். கல்வியாளர்கள் துறை சார்ந்த வல்லுநர்கள் மற்றும் ஆகியோர்களிடம் கலந்தாலோசித்து விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்குப் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாதவாறு புதிய விமான நிலையம் அமைப்பதற்கான பொருத்தமான சில மாற்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 

அவ்விடங்களின் தொழில்நுட்ப ரீதியான சாத்தியக்கூறுகளை சம்மந்தப்பட்ட துறைகள் மூலம் விரிவான ஆய்வு மேற்கொண்டு புதிய விமான நிலையத்திற்கான இடம் விரைவில் இறுதி செய்யப்படும். இதற்கிடையில், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை மேலும் விரிவாக்கம் செய்து, அதன் வடமேற்குப் பகுதியில் ஆண்டுக்கு கூடுதலாக 20 மில்லியன் பயணிகளைக் கையாளக்கூடிய Terminal-5 என்ற புதிய பயணிகள் முனையம் அமைக்க, Airports Authority of India - உடன் இணைந்து, அணுகுசாலை மற்றும் மேம்பாலம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தற்போது நடைபெற்று வரும் Terminal-3 பயணிகள் முனையம் கட்டுமானப் பணிகள் முடிவுற்றபின் ஆண்டுக்கு 35 மில்லியன் பயணிகளைக் கையாளக்கூடியதாக இருக்கும். மேலும், புதிய Terminal-5 பயணிகள் முனையம் செயலாக்கத்திற்குப் பிறகு, ஆண்டுக்கு மொத்தம் 55 மில்லியன் பயணிகளைக் கையாளக்கூடியதாக இவ்விமானநிலையம் இருக்கும். இதன்மூலம், சென்னை விமான நிலையத்தின் சேவைகள் மேம்படுத்தப்படுவதோடு, பயணிகளின் போக்குவரத்துத் தேவை புதிய விமான நிலையம் அமைக்கப்படும்வரை பூர்த்தி செய்யப்படும். 

No comments:

Post a Comment