திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், தாராபுரம்-காங்கேயம் சாலை, குள்ளாய்ப்பாளையம் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் பாலத்திலிருந்து இருசக்கர வாகனம் தவறி விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், சூரியநல்லூர் கிராமம், சேர்வக்காரம்பாளையத்தைச் சேர்ந்த திரு. நாகராஜ் (வயது 44) த/பெ.குழுந்தான் என்பவர் தனது மனைவி திருமதி.ஆனந்தி (வயது 38) மற்றும் மகள் செல்வி. தீட்சையா (வயது 12) ஆகியோருடன் நேற்று (3.5.2025) இரவு தனது இருசக்கர வாகனத்தை ஸ்டாண்டிலிருந்து எடுத்துக்கொண்டு வீட்டிற்குச் செல்லும் வழியில் தாராபுரம் காங்கேயம் சாலை, குள்ளாய்பாளையம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாலத்திலிருந்து இருசக்கர வாகனம் தவறி விழுந்த விபத்தில் திரு.நாகராஜ் மற்றும் திருமதி.ஆனந்தி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
மேலும், இவ்விபத்தில் பலத்த காயமடைந்து கோயம்புத்தூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செல்வி.தீட்சையா என்பவருக்கு சிற்ப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாயும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செல்வி.தீக்ஷிதாவிற்கு ஒரு இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.